திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.78 குறைந்த திருநேரிசை
வென்றிலேன் புலன்க ளைந்தும்
    வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலே னாத லாலே
    செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றேன்
    நீசனேன் ஈச னேயோ
இன்றுளேன் நாளை யில்லேன்
    என்செய்வான் தோன்றி னேனே.
1
கற்றிலேன் கலைகள் ஞானங்
    கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே
    உணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கண்
    பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளேன் இறைவ னேநான்
    என்செய்வான் தோன்றி னேனே.
2
மாட்டினேன் மனத்தை முன்னே
    மறுமையை உணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே
    முதல்வனை வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று
    பற்றதாம் பாவந் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டேன்
    என்செய்வான் தோன்றி னேனே.
3
கரைக்கடந் தோத மேறுங்
    கடல்விட முண்ட கண்டன்
உரைக்கடந் தோது நீர்மை
    யுணர்த்திலே னாத லாலே
அரைக்கிடந் தசையு நாகம்
    அசைப்பனே இன்ப வாழ்க்கைக்
கிரைக்கிடைந் துருகு கின்றேன்
    என்செய்வான் தோன்றி னேனே.
4
செம்மைவெண் ணீறு பூசுஞ்
    சிவனவன் தேவ தேவன்
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும்
    விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா
    வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றேன்
    என்செய்வான் தோன்றி னேனே.
5
பேச்சொடு பேச்சுக் கெல்லாம்
    பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலே னாத லாலே
    கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளும் மூர்த்தி
    நன்மையை புணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே
    என்செய்வான் தோன்றி னேனே.
6
தேசனைத் தேச மாகுந்
    திருமாலோர் பங்கன் றன்னைப்
பூசனைப் புனிதன் றன்னைப்
    புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை
    நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை அறிய மாட்டேன்
    என்செய்வான் தோன்றி னேனே.
7
விளைக்கின்ற வினையை நோக்கி
    வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக
    முயல்கிலேன் இயல வெள்ளந்
திளைக்கின்ற முடியி னான்றன்
    திருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி
    என்செய்வான் தோன்றி னேனே.
8
விளைவறி விலாமை யாலே
    வேதனைக் குரியி லாழ்ந்து
களைகணு மில்லேன் எந்தாய்
    காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார்
    தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லேன் எந்தாய்
    என்செய்வான் தோன்றி னேனே.
9
வெட்டன வுடைய னாகி
    வீரத்தால் மலை யெடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச்
    சுவைப்படக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய
    ஆதியை ஓதி நாளும்
எட்டனை எட்ட மாட்டேன்
    என்செய்வான் தோன்றி னேனே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.79 குறைந்த திருநேரிசை
தம்மானங் காப்ப தாகித்
    தையலார் வலையு ளாழ்ந்து
அம்மானை அமுதன் றன்னை
    ஆதியை அந்த மாய
செம்மான ஒளிகொள் மேனிச்
    சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன்
    என்செய்வான் தோன்றி னேனே.
1
மக்களே மணந்த தார
    மவ்வயிற் றவரை யோம்புஞ்
சிக்குளே யழுந்தி ஈசன்
    திறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி
    யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப
    என்செய்வான் தோன்றி னேனே.
2
கூழையே னாக மாட்டேன்
    கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலும்
    இறைவனை யேத்த மாட்டேன்
மாழையொனண் கண்ணின் நல்ல
    மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு
    மென்செய்வான் தோன்றி னேனே.
3
முன்னையென் வினையி னாலே
    மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப்
    பிதற்றுவன் பேதை யேன்நான்
என்னுளே மன்னி நின்ற
    சீர்மைய தானி னானை
என்னுளே நினைய மாட்டேன்
    என்செய்வான் தோன்றி னேனே.
4
கறையணி கண்டன் றன்னைக்
    காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர்
    பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவில் நாவி னானை
    மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டேன்
    என்செய்வான் தோன்றி னேனே.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் மறைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் மறைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் மறைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் மறைந்து போயிற்று.
9
வளைத்துநின் றவைர் கள்வர்
    வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
    தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
    ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றேன்
    என்செய்வான் தோன்றி னேனே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com